முயல் வளர்ப்பு
முயல்களைத் தோலுக்காகவும், இறைச்சி மற்றும் உரோமத்திற்காகவும் வளர்க்கலாம். சாதாரண தீவனத்தை உண்டு சிறந்த இறைச்சியாக மாற்றும் தன்மை முயலுக்கு உண்டு.
இனங்கள்
இனங்கள்
| விளக்கம் |
சோவியத் சின்செல்லா | இந்த இனம் சோவியத் குடியரசு நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. இதன் எடை 4.5-5 கிலோகிராம் வரை இருக்கும். இது அதிகம் இறைச்சிக்காக வளர்க்கப்பட்டாலும் இதன் ரோமங்கள் கைவினைப் பொருட்கள் செய்யப் பயன்படுகின்றன. |
சாம்பல் நிற ஜெயிண்ட் | இதுவும் சோவியத் குடியரசு நாடுகளைச் சேர்ந்த இனம், எடை 4.5-5 கிலோ வரை இதன் ரோமம் அடர்த்தியாகக் குழியுடன் காணப்படுவதால் இது ‘குழிமுயல்’ எனத் தவறாகக் கருதப்படுகிறது. இது உரோமம் மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகிறது. |
நியூசிலாந்து வெள்ளை | இவ்வினம் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது. உரோமங்கள் வெள்ளை நிறம், தோல் நிறமற்றது. மெலனின் நிறமி இல்லாததால் கண்ணின் நிறம் சிவப்பாக இருக்கும். 4-5 கிலோ எடையுடன் இது இறைச்சி மற்றும் உரோமத்திற்காக வளர்க்கப்படுகிறது. |
வெள்ளை நிற ஜெயிண்ட் | இதுவும் சோவியத் குடியரசின் இனம் ஆகும். இது தோற்றத்தில் நியூசிலாந்து வெள்ளை போன்றே இருக்கும். உரோமம் வெள்ளை நிறத்துடனும், தோலும் கண்களும் சிவப்பு நிறத்துடனும் காணப்படும். ஆனால் உடல் சற்று நீளமாகக் காணப்படும். |
அங்கோரா | 3 கிலோ மட்டுமே எடைகொண்ட பழங்காலத்திலிருந்து வளர்க்கப்படும் சிறிய இனம் ஆகும். கம்பளி தயாரிக்க உதவும் வெள்ளை நிற உரோமங்களுடன் கூடியது. ஒரு வருடத்திற்கு 3-4 முறை உரோமம் கத்தரிக்கலாம். 300-1000 கிராம் அளவு உரோமம் கிடைக்கும். |
கலப்பு இனங்கள் | மேலே கூறப்பட்ட அயல்நாட்டு இனங்களுடன் உள்ளூர் இனங்கள் கலப்பு செய்யப்பட்டு புதிய இனங்கள் உருவாகின்றன. கேரள தட்பவெப்பநிலைக்கு இவ்வினம் மிகவும் ஏற்றது. எடை 4-4.5 கிலோ இருக்கும். உரோமங்களின் நிறம் ஒவ்வொரு முயலுக்கும் வேறுபடும். |
வீட்டமைப்பு மற்றும் இடவசதி
சரியான வெளிச்சத்துடன் காற்றும், நல்ல இடவசதியும் கொண்ட கொட்டகை / வீட்டமைப்பு முறை முயல் வளர்ப்பிற்கு மிகவும் அவசியம் சரியான கூண்டுகள் அல்லது மரத்தால் அமைக்கப்பட்ட பெட்டியமைப்புகளில் குடிநீர், தீவன வசதிகள் முறையாக வழங்கப்பட்டிருக்கவேண்டும். முயல்கள் ஓடிவிடாமல் இருக்க சுற்றுப்புற அமைப்பு கொண்ட வீட்டமைப்பு அவசியம். வளர்க்கும் இடம், தட்பவெப்பநிலை, பொருளாதார வசதியைப் பொறுத்து பல முறைகள் முயல் வளர்ப்பில் பின்பற்றப்படுகின்றன. மூங்கில்கள், பழைய பெட்டிகள், மரத்துண்டுகள், செங்கற்கள், ஏஸ்பெஸ்டாஸ் சீட்டுக்கள் மற்றும் கட்ச் தரைகள், சுவர்கள் போன்றவை பொதுவாக உபயோகிக்கும் பொருட்கள்.
ஒளி (வெளிச்சம்)
முயல்களின் இனப்பெருக்கத்தில் ஒளியானது முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கை அல்லது செயற்கை ஒளி முயல்களுக்குக் கட்டாயம் வழங்கப்படவேண்டும். ஒரு ஆண் முயல் (இனக்கலப்பிற்குப் பயன்படுத்தப்படுவது) 8-12 மணி நேரம் ஒளி வழங்கப்பட்டிருக்க வேண்டும். அப்போது தான் அதன் உயிரணுக்கள் நல்ல ஓட்டத்துடன் இருக்கும். அதே போல் சினைத் தருணத்தில் இருக்கும் பெண் முயலானது குறைந்தது 6 மணி நேரத்திற்காவது வெளிச்சத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதன் இனப்பெருக்கத்திறன் நன்கு இருக்க இவ்வொளி மிகவும் அவசியம். இயற்கை வெளிச்சம் குறைவாக உள்ள இடங்களில் செயற்கை பல்புகளைப் பொருத்துதல் நலம்.பொதுவாக 100 வாட்ஸ் குமிழி விளக்கு (பல்பு) அல்லது 40 வாட்ஸ் ஒளிரும் குழாய் விளக்குகளைப் பயன்படுத்தலாம். இப்பல்புகளை 3 மீட்டர் இடைவெளி விட்டு தரையிலிருந்து 2 மீட்டர் தொலைவில் இருக்குமாறு 16 மணி நேரம் எரியுமாறு அமைத்தல் வேண்டும். இந்தப் பல்புகளை அடிக்கடி அனைத்துப் பின் போடக்கூடாது. காலை 6 மணியிலிருந்து இரவு 8 மணி வரை எரியுமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். அடிக்கடி விளக்கை அணைத்துப் போடுவதால் அவை பயந்து, ஒன்றன் மேல் ஒன்று தாவிக் காயங்களை அனைத்துப் போடுவதால் முயல்கள் பயந்து, ஒன்றன் மேல் ஒன்று தாவிக் காயங்களை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்புண்டு. இளம் முயல்களுக்கு ஓரிரு மணி நேர வெளிச்சம் போதுமானது.
வெப்பநிலை
5 டிகிரி செல்சியஸ் இருந்து 33 டிகிரி செ வரை முயல்கள் வெப்பத்தைத் தாங்கக்கூடியவை. எனினும் முயலுக்கு உகந்த வெப்பநிலை அளவு 10 டிகிரி செல்சியஸ் – 26 டிகிரி செல்சியஸ். நமது இந்தியத் தட்பவெப்பநிலைக்கு முயல்கள் மிகவும் ஏற்றவை. சூடான காற்றை விட முயல்கள் குளிர்காற்றையே விரும்பும். எனினும் உயரமான மலைப்பகுதிகளில் இவைகள் வளர்வது இல்லை. கோடைகாலங்களில் சிறிது வெப்ப அழுத்தம் ஏற்படலாம். சரியான குளிர்ச்சியும், காற்றும் அளிப்பதால் இவ்வழுத்தத்தைத் தணிக்கலாம். வறட்சி ஏற்பட்டு அதனால் முயல்கள் பாதிக்கப்படாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். வயதான முயல்கள் தன் உடலை நீட்சிப்பதன் மூலம் வெப்பத்தை தாங்கிக் கொள்ளலாம்.இளம் முயல்களைத் தகுந்த முறையில் பாதுகாக்கவில்லையெனில் அவை வெப்பத்தைத் தாங்க இயலாமல் பாதிக்கப்படலாம்.
ஈரப்பதம்
முயல்கள் அதிக ஈரப்பதத்தையும் தாங்கக்கூடியவை, எனினும் ஈரப்பதம் 50 சதவிகிதமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதிக வெப்பமும் அதிக ஈரப்பதமும் முயல்களில் நோய்த் தாக்கம் ஏற்படுத்தலாம். எனவே மழைக்காலங்களில் ஈரப்பதத்தைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். எந்த ஒரு நீர்க்கசிவும் உள்ளே ஏற்படாதவாறு தண்ணீர்க்குடுவைகளை வெளியிலேயே வைப்பது நல்லது.
காற்றோட்டம்
சுத்தமான புகையற்ற காற்று முயல்களுக்கு மிக அவசியம். முயல் பண்ணையில் தூயகாற்று தங்கு தடையின்றி உலவுமாறு அமைந்திருத்தல் வேண்டும். கோடைக்காலங்களில் காற்று குளிர்ந்ததாக இருத்தல் வேண்டும். வறண்ட காற்று முயல்களின் சுவாசத்திற்கு ஏற்றதல்ல. எனவே ஆங்காங்கு மரங்களை நட்டு வளர்த்தல் நன்மை பயக்கும்.
சப்தம்
முயல்களில் ஒலியின் பாதிப்பு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை எனினும் முயல்கள் அதிக சப்தத்தை விரும்புவதில்லை. குறிப்பாக குட்டிகள் பாலூட்டும் போதும், இனச்சேர்க்கையின் போதும் சிறு சப்தம் கூட பாதிப்பு ஏற்படுத்தலாம்.
கூண்டு முறை
கூண்டின் உயரம் 50 செ.மீ ஆகவும், அகலம் 70 செ.மீ நீளம் 90 செ.மீ ஆகவும் இருத்தல் வேண்டும். இது பெண் முயல்களுக்கான கூண்டின் அளவு. ஆண் முயல்களுக்கு இவை முறையே 45 செ.மீ, 60 செ.மீ, 60 செ.மீ. கூண்டு செய்யும் கம்பி அளவு அடிப்பாகத்தில் 1 செ.மீ x 1 செ.மீ பக்கங்களில் 2.5 செ.மீ x 2.5 செ.மீ அளவும் இருக்கவேண்டும். கூண்டின் அடிப்பாகம் தரைமட்டத்தில் இருந்து 75-90 செ.மீ உயரத்தில் இருக்குமாறும், எலி, பாம்பு தொல்லைகள் இல்லாதவாறும் கூண்டுகளை வைக்கவேண்டும். கூண்டுகள் நல்ல குளிர்ந்த நிழற்பாங்கான இடத்தில் அமைக்கப்படவேண்டும்.
கொட்டில் முறை
தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட முயல் குட்டிகளை 1.2 மீட்டர் அகலம், 1.5 மீ நீளம், 0.5 மீ உயரம் கொண்ட கொட்டிலில் அடைக்கலாம். ஒரு கொட்டிலில் 20 குட்டிகள் வரை அடைக்கலாம். பருவமடைந்த ஆண், பெண் குட்டிகளை ஒரு கொட்டிலில் அடைத்தால் அவை ஒன்றோடொன்று சண்டையிட்டுக் காயங்கள் ஏற்படுத்திக் கொள்ளும். எனவே ஒவ்வொன்றையும் தனியே அடைத்தல் சிறந்தது.
குடிசை முறை
நிழலான இடத்தில் குடிசைகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். தரை கான்கிரீட் சிமெண்ட் தளமாக இருத்தல் நலம். குடிசையைச் சுற்றிலும் சுற்றுச் சுவர் சிறிது உயரத்துடன் பாம்பு, எலி போன்றவற்றிலிருந்து பாதுகாப்பானதாக இருத்தல் வேண்டும். மேற்கூரை, மரக்கட்டை, ஆஸ்பெஸ்டாஸ் அல்லது இரும்புக் கம்பிகள் கொண்டதாக இருக்கலாம்.
பறவைக்கூடு முறை
இம்முறையில் பல அளவுகளில் கூடுகள் இருந்தாலும் 50 செ.மீ நீளமும், 30 செ.மீ அகலமும், 15 செ.மீ உயரமும் கொண்ட அளவு பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. இது மரத்தால் செய்யப்பட்டாலும் காற்றும், வெளிச்சமும் புக வசதியாக இருக்கவேண்டும். கழிவுகள் வெளியேற வசதியாகக் கீழே கம்பி வலை போல் பின்னப்பட்ட அடிப்பாகம் அமைக்கலாம்.
தீவனமும் நீரும்
அலுமினியம் அல்லது கால்வனைசிங் செய்யப்பட்ட இரும்பினால் ஆன தீவனத்தொட்டியைப் பயன்படுத்தலாம். தீவனத் தொட்டியானது கூண்டின் ஓரங்களில் வெளியிலிருந்து கதவைத் திறக்காமலே தீனியை உள்ளே கையைவிட்டுப் போடுமாறு அமைப்பது நன்று. கூண்டுகளில் நீர் வைக்க மண்பானைகள் உபயோகிக்கப்படுகின்றன.தானாக நீர் வெளியாகும் குழாய் அல்லது புட்டியில் நீர் அளிப்பதே சிறந்தது.
முயல்களின் தீவனத் தேவை
முயல்களின் ஊட்டச்சத்துக்கள் அதன் வயது மற்றும் உற்பத்தித் திறனைப் பொறுத்தே அமையும். சிறந்த வளர்ச்சியைப் பெற முயலின் வயதையும் உட்கொள்ளும் திறனையும் பொறுத்து உணவளித்தல் வேண்டும். பொதுவான ஒரு வகை உணவையே அனைத்து முயல்களுக்கும் கொடுக்க வேண்டும். நல்ல இலாபம் ஈட்ட முயல்களுக்கு வளர்ச்சியை ஊக்குவிக்க ஒரு வகைத் தீவனமும், பால் உற்பத்தியை அதிகரிக்க ஒரு வகைத் தீவனமென இரண்டு வகைகளைப் பின்பற்றுதல் நன்று.
வளர்ச்சிக்கான ஊட்டச்சத்துக்கள்
குட்டிகளுக்கான வளர்ச்சிக்கெனப் பல உயிர் மற்றும் புரதச்சத்து நிறைந்த தீவனம் அளிக்கவேண்டும். இத்தீவனம் வயது அதிகரிக்க அதிகரிக்க அளவு குறையும். உட்கொள்ளும் தீவனத்தை விட அதிகமாகவே வளர்ச்சியடையும் குட்டிகளுக்கான தீவனம் அதிக விலையாக இருக்கும் பட்சத்தில் எளிய தீனிகளை நாமே தயாரித்து அளிக்கலாம்.
22 சதவிகிதம் பண்படா புரதமுள்ள குட்டிகளுக்கான தீனியில் அடங்கியுள்ள பொருட்கள்
22 சதவிகிதம் பண்படா புரதமுள்ள குட்டிகளுக்கான தீனியில் அடங்கியுள்ள பொருட்கள்
பொருட்கள்
| அளவு |
ஓட்ஸ் (அரைத்தது) | 19.0 |
கோதுமை (அரைத்தது) | 10.0 |
பார்லி (அரைத்தது) | 10.0 |
கோதுமை தவிடு | 6.4 |
சோயாபீன் கழிவு | 12.0 |
மீன் கழிவு | 3.2 |
குதிரை மசால் (ஹைட்ரஜன் ஒடுக்கம் செய்யப்பட்ட) | 23.7 |
ரேப்ஸ்டு கழிவு | 2.5 |
உலர்ந்த தயிர்த் தெளிவு | 4.0 |
நொதித்து உலர்ந்த ஈஸ்ட் | 3.0 |
கரும்புச்சக்கை | 1.0 |
அயோடைஸ்டு உப்பு | 0.5 |
வைட்டமின்கள், தாதுக்களின் கலவை | 0.775 |
டிஎல் மெத்தியோனைன் | 0.07 |
வாசனைத் தீவனம் | 0.05 |
தாயிடமிருந்து குட்டிகளைப் பிரிக்கும் போது அளிக்கவேண்டிய ஊட்டச்சத்துக்கள்
தாயிடமிருந்து குட்டி முயல்களைப் பிரிக்கும் 30-45வது நாளில் அதன் தீவனம் பாலில் இருந்து திட நிலையிலுள்ள தீவனங்களுக்கு மாறுகிறது. அப்போது அதிக நார்ச்சத்து மிகுந்த ஸ்டார்ச் குறைந்த தீவனம் அளிக்கவேண்டும். அதன்பின் இரண்டு வாரங்கள் கழித்து அதன் செரிக்கும் தன்மை அதிகரிக்கும் போது நல்ல ஸ்டார்ச் சத்து நிறைந்த தீவனங்களை அளிக்கலாம். நல்ல உற்பத்தித் திறன் பெற நன்கு செரிக்கக்கூடிய அதிக கார்போஹைட்ரேட் அடங்கிய தீவனங்கள் கொடுத்தல் வேண்டும்.
சினைத் தருணத்தில் தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள்
சினைத்தருணத்தில் அதிக புரதம், ஆற்றல், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் தேவைப்படுகிறது. நல்ல உற்பத்திக்குக் குறைந்தது 18 சதவிகிதம் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் தேவை. பெண் முயல்கள் அடிக்கடி கருத்தரித்து குட்டி ஈன்று கொண்டே இருப்பதால் இவற்றுக்கு அதிக கால்சியம், பாஸ்பரஸ் தேவைப்படுகிறது. குட்டிகளுக்குப் பாலூட்டவும் அதிக சத்துக்கள் தேவைப்படுகிறது.
அதே சமயம் குட்டிகள் நீண்ட நாள் பாலூட்ட அனுமதித்தால் அவைகள் குண்டாகி ஏதேனும் நோய் ஏற்படலாம். குட்டி ஈன்ற 21 நாட்களில் பால் சுரப்பு அதிகமாக இருக்கும்.பிறகு குறைய ஆரம்பித்து விடும். அடுத்த சினை தரித்தவுடன் பால் சுரப்பு நாளங்கள் மீண்டும் அதன் வேலையைத் துவக்கிவிடும்.
சினைக்கால உணவூட்டம்
பொருட்கள்
| கலந்துள்ள அளவு |
முயல் மசால் கழிவுகள் | 40.0 |
பார்லே அரைத்தது | 20.25 |
கோதுமை மாவுக் கழிவு | 20.0 |
சோயாபீன்ஸ் கழிவு | 14.0 |
கரும்புச் சக்கை | 3.0 |
கொழுப்பு | 1.5 |
டை கால்சியம் பாஸ்பேட் | 0.75 |
உப்பு (சிறிதளவு) | 0.5 |
ஓட்ஸ் அரைத்தது பார் | 26.5 |
ஊக்க உணவுகள்
சிறிய அளவிலான முயல் வளர்ப்புப் பண்ணைகளில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய வைக்கோல், தேர்ந்தெடுக்கப்பட்ட பசும்புல் மற்றும் இதர தீனிகள் அளிப்பதே போதுமானதாகும். அதிக புரதம் மற்றும் ஆற்றல் கொண்ட தீவனங்கள் சிறிதளவு அளிக்கலாம்.
உட்கொள்ளும் உணவு
தினசரி உட்கொள்ளும் உணவு அதன் உடல் எடையில் 5 சதவிகிதம் ஆகும். அதே போல் முயலானது தனது உடல் எடையில் 10 சதவிகிதம் அளவு நீர் அருந்தும். சினை முயல்களுக்கு இந்த அளவு மேலும் அதிகரிக்கும். முயல் வளர்ப்பில் சரியான அளவு தீவனங்கள் மற்றும் தூயநீர் வழங்குதல் அவசியம் ஆகும்.
நாளொன்றுக்கு 100 கிராம் புற்களும், 200-250 கிராம் சமச்சீரான தீவனம் ஒரு சினை முயலுக்கு அவசியம் ஆகும்
முயல்களின் உணவூட்டம்
குட்டிகள் பிறந்த முதல் 15-21 நாட்களுக்கு பால் மட்டுமே அவைகளுக்கு உணவு. எனவே குட்டிகள் அனைத்தும் நன்கு பால் குடிக்கின்றனவா என்பதைக் கவனித்துக் கொள்ளல்வேண்டும். இல்லையனில் நன்கு பால் குடிக்கும் குட்டிகள் நன்றாக வளரும். பால் ஊட்டத் தெரியாத குட்டிகள் இறந்துவிடும். இந்தச் சூழ்நிலையில் தாய் முயலில் பால் ஒழுங்காக சுரக்கிறதா எனப்பார்த்து அதற்கேற்ப தீவனமும் நீரும் அளித்தல்வேண்டும்.
15-21 நாட்களிலிலேயே குட்டிகளுக்குச் சிறிது சிறிதாக புற்கள், தீனிகளை கொறிக்கச் செய்து பழக்க வேண்டும். 21 நாட்களுக்குப் பின் குட்டிகள் பாலை குறைத்துக் கொண்டு தீனிகளைக் கொறிக்க ஆரம்பித்து விடும். தாயிடமிருந்து பிரிக்கும் காலங்களில் இருந்தே பசும்புற்கள், காய்கறிகள் மற்றும் அடர் தீவனங்கள் அளிக்கவேண்டும்.
உணவளிக்கும் நேரம்
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சரியான இடைவெளிவிட்டு உணவளித்தல் நலம். அடர் தீவனங்களை காலை 7.00 மணி மற்றும் மாலை 5 மணிக்கும் அளிக்கலாம். பசும் புற்களை மாலை நேரங்களில் அவை மிகச்சுறுசுறுப்பாக இருக்கும் நேரங்களில் அளிக்கலாம். உணவானது புதிதாகவும், எந்த குப்பை, அழுக்கின்றி சுத்தமானதாகவும் இருக்கவேண்டும்.
உணவளிக்கும் போது கவனிக்க வேண்டியவை
- சுத்தமான, புதிய புற்கள் அல்லது பயறு வகைத் தாவரக் கழிவுகளை முயலுக்கு உணவாகக் கொடுக்கலாம் (70 சதவிகிதம்).
- இனப்பெருக்கத்திற்குப் பயன்படுத்தும் ஆண், பெண் முயல்களுக்கு 50 சதவிகிதம் பயறு வகைத் தாவரங்களும் 50 சதவிகிதம் புற்களும் சேர்ந்த உணவு மிகவும் ஏற்ற மலிவான தீவனமாகும்.
- அடர் தீவனத்தில் சிறிது நீர் விட்டுக் கூழாக்குவதன் மூலம் அது பறந்து வீணாவது குறைக்கப்படுகிறது.
- முயல்கள் புளித்துப் போனதை விரும்புவதில்லை. எனவே அவ்வகை உணவு அல்லது தீவனங்களை தவிர்ப்பது நல்லது.
- தூய, குளிர்ந்த நீர் எல்லாச் சமயங்களிலும் கிடைக்குமாறு செய்தல் வேண்டும்.
- குட்டி ஈன்றவுடன் தாய் முயலுக்குத் தீவனம் அதிகமாக அளித்தல் கூடாது.குட்டி பிறந்த 5-7 நாட்கள் கழித்து தான் தாய் முயலின் தீவனத்தை அதிகப்படுத்தவேண்டும்.
- தீவனத்தில் திடீரென எதையும் புதிதாகச் சேர்த்தோ, நீக்கியோ மாற்றங்கள் செய்யக்கூடாது.
- 5 சதவிகிதம் கரும்புக் கழிவுகளை சேர்த்துக் கொடுக்கலாம்.
- அதிக அளவு கலப்புத் தீவனம் கொடுப்பதை விட சிறிது வைக்கோல் அல்லது புல் சேர்த்துக் கொடுப்பதால் குட்டிகள் உட்கொள்ளும் அளவு அதிகமாக இருக்கும்.
- ரேப்சீடு எண்ணெய்க் கழிவுகளை தீவனத்தில் சேர்க்கும் முன் சிறிது சூடு செய்தல் நலம். மேலும் இது 15 சதவிகிதம் அளவு மட்டுமே தீவனத்தில் இருக்கவேண்டும்.
- உணவில் கால்சியம் சிறிதளவே இருக்கவேண்டும். அதிகளவு கால்சியம் சினை முயலின் வயிற்றுக் குட்டிகளைப் பாதிக்கும். ஆகையால் சரியான அளவே பயன்படுத்த வேண்டும்.
- இனச்சேர்க்கையில்லாத காலங்களில் ஆண், பெண் முயல்களுக்கு நாளொன்றுக்கு 100-120 கிராம் உருளைத் தீவனமளிக்கலாம்.
- வளரும் குட்டிகள், சினை முயல்களுக்கு தானியங்கள் அல்லது உருளைத் தீவனங்களை சிறிது இடைவெளிவிட்டு அவ்வப்போது அளிக்கவேண்டும்.
- நல்ல தரமான பயறு வகைத் தாவரங்களையும், அதன் கழிவுகளையும் தீவனமாக அளிக்கலாம்.
- கேரட், பசும்புற்கள், முள்ளங்கி. லியூசர்ன், பெர்சீம் போன்றவை சதைப்பற்று மிகுந்த முயலுக்கு உகந்த தீவனமாகும்.
- மேலும் சமையல் கழிவுகள், கெட்டுப்போன பால், உடைந்து அழுகிய பழங்கள் போன்ற வீணாகும் பொருட்களையும் முயல்களுக்குக் கொடுக்கலாம்.
பலவகையான தீவனப் பாத்திரங்கள் மற்றும் தீவன அமைப்புகள் முயல் வளர்ப்பில் பயன்படுத்தப்படுகிறது. கூண்டுகளில் வெளியிலிருந்தே உள்ளே தீவனம் வைப்பது போல் அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. தரையிலிருந்து தீவனத் தொட்டி 5-8 செ.மீ உயரத்தில் இருக்கவேண்டும். அப்போது தான் முயல் கழிவுகள் தீவனத்தொட்டியில் விழாமல் இருக்கும். நீரைத் திறந்தவெளியில் வைப்பதை விட புட்டிகளில் அடைத்து வைத்தல் சிறந்தது. மண் பானை (அ) அலுமினிய கிண்ணங்கள் போன்றவை மலிவான பொருட்களாகும். தீவனங்கள் அதிகம் சிந்தி இறையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். தண்ணீர் புட்டிகளை சுத்தமாகக் கழுவிப் பயன்படுத்த வேண்டும். பெரிய பண்ணைகளில் நீரைத் தானாக செல்லுமாறு அமைத்தல் ஆள்கூலியை மிச்சப்படுத்தும். எந்த வகைத் தொட்டிகளாயினும் அவற்றைக் கழுவி சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும்.
இரு கலப்புத் தீவனங்களின் கலவைகள்
பொருட்கள்
| அளவு |
கொண்டைக்கடலை | 14 பங்கு |
கோதுமை | 30 பங்கு |
கடலை பிண்ணாக்கு | 20 பங்கு |
எள்ளுப் பிண்ணாக்கு | 20 பங்கு |
இறைச்சி மற்றும் எலும்புத்தூள் | 10 பங்கு |
உளுந்து உமி | 24 பங்கு |
தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் | 1-5 பங்கு |
உப்பு | 0.5 பங்கு |
கொண்டைக்கடலை | 10 பங்கு |
கடலைப்பிண்ணாக்கு | 20 பங்கு |
எள்ளுப்பிண்ணாக்கு | 5 பங்கு |
தீட்டப்பட்ட அரிசி | 35 பங்கு |
கோதுமை | 28 பங்கு |
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் | 1.5 பங்கு |
உப்பு | 0.5 பங்கு |
100 |
முயல்களுக்கான தீவன அளவு அட்டவணை
முயல்கள்
| உடல் எடை (தோராயமாக) | நாளொன்றுக்குக் கொடுக்கவேண்டியது | |
அடர் தீவனம் | பசும்புல் | ||
ஆண்முயல் | 4-5 கிலோ | 150 கிராம் | 600 கிராம் |
பெண் முயல் | 4-5 கிலோ | 150 கிராம் | 600 கிராம் |
சினை முயல்கள் | - | 200 கிராம் | 700 கிராம் |
வளரும் முயல்கள் (வார வயதில்) | 600-700 கிராம் | 50 கிராம் | 200 கிராம் |
அகத்தி பயிரிடப்படும் தீவனப்பயிர்களான கினியாடெஸ்மான்தஸ். லூசர்ன், ஸ்டைலோ போன்றவையும் பலா இலை, முள் முருங்கை, கல்யாண முருங்கை இலை போன்றவைகளையும் கொடுக்கலாம்.
மேலும் முயல்களில் வளரும் முயல்களுக்கு 100 கிராம் உடல் எடைக்கு 10 மிலி அளவும் பாலூட்டும் முயலுக்கு 100 கிராம் உடல் எடைக்கு 90 மிலி அளவும் தூய தண்ணீர் வழங்கப்படவேண்டும்.
மேலும் முயல்களில் வளரும் முயல்களுக்கு 100 கிராம் உடல் எடைக்கு 10 மிலி அளவும் பாலூட்டும் முயலுக்கு 100 கிராம் உடல் எடைக்கு 90 மிலி அளவும் தூய தண்ணீர் வழங்கப்படவேண்டும்.
இனப்பெருக்கத்திற்கான முயல்களைத் தெரிவு செய்தல்
நல்ல, ஆரோக்கியமான முயல்களிடமிருந்து தான் வளமான குட்டிகளைப் பெற முடியும். ஆகவே சிறந்த இனங்களைத் தேர்வு செய்தல் அவசியம்.
ஆண் முயல்
இனச்சேர்க்கைக்குப் பயன்படுத்தம் ஆண் முயலுக்கு குறைந்தது 8 மாத வயதாவது இருக்கவேண்டும். நல்ல கிடா முயலானது 3 வருடங்கள் வலை நல்ல இனவிருத்தித் திறன் பெற்றிருக்கவேண்டும். இளம் கிடாக்கள் 3 (அ) நான்கு நாட்கள் இடைவெளிவிட்டு ஒரு பெட்டை முயலுடன் சேர்க்கலாம். 12 மாத வயதிற்குப் பிறகு வாரத்திற்கு 4-6 பெட்டைகளுடன் சேர்க்கலாம். 6 வருடத்திற்குப் பின்பு அதன் விந்தணு உற்பத்தி மிகவும் குறைந்து விடும். ஆதலால் அதைப் பண்ணையிலிருந்து கழித்து விட வேண்டும். கிடாக்களின் இனவிருத்தித் திறன் குறையாமல் இருக்க நல்ல உணவூட்டமும், பராமரிப்பும் அவசியம். புரதம், தாதுக்கள், விட்டமின்கள் நிறைந்த உணவளித்தல் அவசியம். அதோடு கிடாக்களைத் தனித்தனியே பராமரித்தால் அவை சண்டையிட்டுக் கொள்வதைத் தடுக்கலாம்.
பெண் முயல்
இனவிருத்திக்குப் பயன்படுத்தும் பெண் முயல் பெட்டை முயல் எனப்படும். இது அதிக ஆரோக்கியமும் இனவிருத்தித்திறனும் பெற்றிருத்தல் அவசியம். பெட்டை முயலானது தட்பவெப்பநிலை, இனம் மற்றும் உணவூட்ட அளவு ஆகியவற்றைப் பொறுத்தே அதன் இனப்பெருக்கத்திறன் அமையும். பெரிய இனங்களை விடச் சிறிய இனங்கள் விரைவிலேயே பருவமடைந்து விடுகின்றன. சிறிய இனங்கள் 3-4 மாதங்களிலும், எடை மிகுந்த இனங்கள் 8-9 மாதங்களிலும் பருவமடைகின்றன. 3 வருடங்கள் வரை மட்டுமே பெண் முயல்களை இனப்பெருக்கத்திற்குப் பயன்படுத்தவேண்டும்.
கருமுட்டை வெளிப்படுதல்
முயல்களில் கருமுட்டை வெளிப்படுவது தன்னிச்சையாக நடப்பதில்லை. இவைகளில் ஓஸ்டிரஸ் சுழற்சி காணப்படுவதில்லை. எனவே இனச்சேர்க்கை மூலம் கருமுட்டை வெளிவருமாறு தூண்டப்படுகிறது. இனச்சேர்க்கைத் தூண்டலானது இனக்கலப்பினாலோ, வெளிப்புறத் தூண்டலினாலோ, இனப்பெருக்க அணு உற்பத்தித் தூண்டுதல் மூலமாகவோ, கருமுட்டை வெளிவருதல் மூலமாகவோ நடைபெறுகிறது. சில முறை பெண் முயல்களே ஒன்றையொன்று தூண்டிக் கொள்வதும் உண்டு. இதனால் பொய்ச்சினை மற்றும் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புண்டு. இனச்சேர்க்கை செய்த 10 மணி நேரம் கழித்துதான் கருமுட்டை வெளிவரும். ஆண்டு முழுவதும் முயல்கள் இனச்சேர்க்கைக் கொண்டாலும், சுரப்பிகள் விரிந்து பின்பு பின்னோக்கிச் செல்லும் சுழற்சியின் 15-16 நாட்களில் தான் அவற்றின் கருமுட்டை வெளிப்படுவது அதிகமாக இருக்கும். பிற நாட்களில் பெண் முயல்கள் இனச்சேர்க்கையை விரும்பவதில்லை. சினைப்பையை இயந்திரம் மூலம் தூண்டி விடுவதன் மூலமாகவும் கரு முட்டை வெளிவருவதைத் துரிதப்படுத்தலாம்.
சினைக்காலம்
முயல்களின் சினைக்காலம் 28-32 நாட்கள் ஆகும். பெண் முயல் கூண்டுக்குள் வைக்கோல், புற்கள் போன்ற பொருட்கள் வைப்பதால் சினை முயல் தன் குட்டிகளுக்கு படுக்கையைத் தயார் செய்து கொள்ளும். குட்டி ஈனுவதற்கு ஒரு வாரம் முன்பே வைக்கோல், புற்கள், மரத்துண்டுகள் போன்ற பொருட்களை உள்ளே போட்டு வைத்துக் கொள்ளவேண்டும். மரத்தூளைப் படுக்கை தயார் செய்ய தனது சொந்த முடியையே பிய்த்துக் கொள்ளும். சரியான தீவனம் மற்றும் தூய தண்ணீர் சினைக்காலத்தில் வழங்கப்படவேண்டும். சூழ்நிலை மாற்றங்கள் சினை முயல்களைப் பாதிக்காமல் பாதுகாத்தல் அவசியம்.
சினையை உறுதிப்படுத்தும் சோதனைகள்
- வயிற்றை அழுத்திப் பார்க்கும்போது கலப்பு செய்த 2வது வாரத்தில் இளம் சினைக்கருக்கள் கையில் தட்டுப்பட்டால் சினையை உறுதி செய்து கொள்ளலாம்.சினையான முயலுடன் ஆண் முயல் கலப்பு செய்து விடாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.
- கருப்பை பெருத்தல் : கலப்பு செய்து 9 நாட்களுக்குப் பிறகு 12 மி.மீ அளவு கருப்பை வீங்கி இருக்கும். இது 13 நாட்களில் 20 மி.மீ அளவு மேலும் பெருத்துக் காணப்படும். நன்கு அனுபவமிக்கவர்கள் இதைப் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும்.
உடல் எடை அதிகரிப்பு
கலப்பு செய்து 30 நாட்கள் கழித்து உடல் எடை 300-400 கிராம் எடை (பெரிய இனங்களில்) கூடி இருக்கும்.
குட்டி ஈனுதல்
பொதுவாக முயல்கள் இரவில் தான் குட்டி ஈனுகின்றன. அவை குட்டி ஈனும் போது எந்த ஒரு தொந்தரவையும் விரும்புவதில்லை. 7 – 30 நிமிடத்திற்குள் குட்டி ஈனுதல் நடைபெற்று முடிந்து விடும். சில சமயம் எல்லாக் குட்டிகளும் தொடர்ந்து வெளி வராமல், சில குட்டிகள் பல மணி நேரம் கழித்தும் வெளிவரலாம். அச்சமயத்தில் ஆக்ஸிடோசின் ஊசி போடப்பட்டு குட்டிகள் வெளிக்கொணரப்படும். குட்டி போட்டவுடன் தாய் முயல் குட்டிகளை நக்கி சினைக்கொடியை உண்டு விடும். பிறந்த குட்டிகள் தாயிடம் பாலூட்ட முயலும். அவ்வாறு பாலூட்ட இயலாத குட்டிகள் உடல் நலம் குன்றி குட்டியிலேயே இறந்து விடும். தாய் முயலானது வேண்டுமளவு அதன் விருப்பத்திற்கு உணவு எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படவேண்டும். அப்போது தான் குட்டிகளுக்குத் தேவையான அளவு பால் கிடைக்கும். தாய் முயல் இரவில் தான் குட்டிகள் பால் குடிக்க அனுமதிக்கும். ஒரு ஈற்றில் 6-12 குட்டிகள் வரை ஈனலாம்.
தாயிடமிருந்து பிரித்தல்
குட்டிகள் பிறந்த சில நாட்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே முக்கிய உணவு. 3வது வாரத்தில் சிறிதளவு உரோமம் வளர்ந்த குட்டிகள் கண் திறந்து, தீவனங்களைக் கொறிக்க ஆரம்பிக்கும். 4 – 6வது வாரத்தில் குட்டிகளைத் தாயிடமிருந்து பிரித்து விடலாம். முதல் 21 நாட்களுக்கு மட்டுமே தாய்ப்பால் அவசியம். அதன் பின் பாலைக் குறைத்து பிற தீவனங்களைக் கொறிக்கப் பழக்குதல் வேண்டும்.
இனம் பிரித்தல்
குட்டிகளைப் பிரிக்கும் போதே இனங்களைக் கண்டறிந்து ஆண், பெண் முயல்களைத் தனித்தனியாகப் பிரித்து விடவேண்டும். குட்டிகளின் இனப்பெருக்க உறுப்பை கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் மூலம் அழுத்தும் போது ஆண்குறி காணப்பட்டால் ஆண் முயல் என்றும் அல்லது சற்று துவாரம் போல் காணப்பட்டால் அதைப் பெண் எனவும் கண்டறியலாம்.
முயலின் பல்வேறு வளர்ச்சி நிலைகளின் அடடவணை
இனக்கலப்பிற்குத் தேவையான ஆண் முயல்கள்
| 10 பெண் முயல்களுக்கு 1 ஆண் முயல் |
முதல் கலப்பிற்கான வயது | சிறிய இனங்கள் – 4 மாதம் அதிக எடையுள்ள இனங்கள் 5-6 மாதங்கள் |
இனப்பெருக்கத்திற்கான பண்புகள் | முயல்கள் பல இனச்சேர்க்கைப் பருவம் கொண்டவை. பெண் முயல்களுக்கு பருவ சுழற்சி இல்லையெனினும் மாதத்தில் 12 நாட்கள் சூட்டில் இருக்கும். |
சினைத்தருண அறிகுறிகள் | அமைதியின்மை, வாயைத் தரையில் அல்லது கூண்டில் அடிக்கடி தேய்த்தல், ஒரு புறமாக சாய்ந்து படுத்தல், வாலைத்தூக்குதல், தடித்த, கருஞ்சிவப்பான, ஈரமான பெண் உறுப்பு. |
இனச்சேர்க்கை | சினை அறிகுறியுள்ள பெண் முயலை ஆண் முயலின் கூண்டிற்கு எடுத்துச் சென்று இனச்சேர்க்கைக்கு விடவேண்டும். சரியான பருவத்தில் உள்ள பெண் முயல் வாலைத்தூக்கி சேர்க்கையை ஏற்றுக் கொள்ளும். ஓரிரு நிமிடத்தில் இந்நிகழ்ச்சி நடந்த உடன், ஆண் முயல் கிரீச் என்ற சப்தத்துடன் ஒரு புறமாகவோ அல்லது பின்புறமாகவோ விழும். |
கருமுட்டை வெளிவருதல் | இனச்சேர்க்கை நடந்த 10-13 மணி நேரங்களில் கருமுட்டை வெளிவரும். தன்னியல்பாக தூண்டப்படும் கருமுட்டை வெளிவரும். |
போலிச்சினை / பொய்ச்சினை | பெண் முயல்கள் தங்களுக்குள்ளே மலட்டு இனப்புணர்ச்சி செய்து கொள்வதால் 16-17 நாட்கள் இவை சினைதரித்தது போல் காணப்படும். இச்சமயத்தில இவை குட்டிகளுக்குப் படுக்கை தயார் செய்ய தனது முடியை பிய்த்துக் கொள்ளும். பெண் இனப்பெருக்க உறுப்பும் சிறிது வீங்கிக் காணப்படும். |
சினைக்காலம் | 28-34 நாட்கள் (சராசரியாக 31 நாட்கள்) |
சினையை உறுதிப்படுத்தும் சோதனைகள் | முயலின் சினையை உறுதிப்படுத்த கலப்பு சோதனை, எடை கூடும் முறை மற்றும் அழுத்தச் சோதனை முறை போன்றவற்றின் மூலம் அறியலாம். நன்கு அறிந்த நபரால் செய்யப்படும் அழுத்தச் சோதனை முறையே எல்லாவற்றிலும் சிறந்தது. |
குட்டிகளின் எண்ணிக்கை | 6-8 குட்டிகள் |
தாயிடமிருந்து குட்டிகளைப் பிரித்தல் | 4-6 வாரங்கள் |
அடுத்தடுத்த ஈற்றுகளுக்கு (குட்டி ஈனும்) உள்ள இடைவெளி | 2 மாதங்கள் (ஒரு ஈற்று முடிந்து குட்டியிணை பிரித்தவுடன் இனச்சேர்க்கைக்கு விட்டால் இந்த இடைவெளி ஒரு மாதமாகக் குறையலாம்). |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக