பக்கங்கள்

செவ்வாய், 15 ஜனவரி, 2013

குடும்பத்தில் மனைவியின் பங்கு!

குடும்பத்தில் மனைவியின் பங்கு!

வேதத்தின் வெளிச்சத்திலே நம்முடைய வாழ்கையின் பாதையை சீர்தூக்கிப் பார்போம். 'உம்முடைய வசனம் என் கால்களுக்கு தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது' என்று தாவீது சங்கீதத்தில் கூறுவதை நாம் வாசித்திருப்போம். ஆனால் பெரும்பான்மையான நேரங்களில் போதகத்தை கேட்பதோடு நின்று விடுகிறோம். அல்லது வாசித்த வேத பகுதியை நம்முடைய வாழ்கையில் நடைமுறை படுத்த தேவையான முயற்சிகளை எடுக்க தவறி விடுகிறோம்.

இன்று குடும்பங்களில் மனைவியின் பங்கு குறித்து வேதத்தில் தேவன் என்ன கூறியுள்ளார் என்று பார்போம். பின்னர் அவ்வசனங்களுக்கு நம்முடைய பதில் என்னவென்றும் சிந்திப்பது நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பிரயோஜனமாக இருக்கும். தேவன் நமக்கு உதவி செய்வாராக.

தனிப்பட்ட வாழ்க்கை

1. I தீமோத்தேயு 2:10 - தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும் , தேவ பக்தியுள்ளவர்களென்று சொல்லிகொள்ளுகிற ஸ்திரிகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.

• என்னுடைய உடை தேவ பக்தியுள்ள பெண்ணாக என்னை உலகிற்கு காட்டுகிறதா?

• என்னுடைய வெளிப்புற தோற்றம் அடக்கமாக, ஒழுக்கமாக மற்றவர்கள் மதிக்கத்தகும் வகையில் உள்ளதா?

2. I பேதுரு 3:3,4 - புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும், அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது ;

• என்னை காண்கிறவர்கள் உள்ளான அலங்காரத்தை காண்கிறார்களா ? புறம்பான ஆடம்பரத்தை காண்கிறார்களா ? ஆவியின் கனிகளினால் நிறைந்த நன்றியுள்ள இருதயம் தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது .

• ஒரு நாளில் நாம் எவ்வளவு நேரம் ஆவிக்குரிய காரியங்களிலும், வெளிப்புற அழகிற்கும் செலவு செய்கிறோம் ?

3. I தீமோத்தேயு 2:11 -ஸ்திரியானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளகடவள்

பவுல் தன்னுடைய உடன் ஊழியனான தீமோத்தேயுவிற்கு, தேவனுடைய வீட்டில் விசுவாசிகள் நடக்க வேண்டிய வகையை குறித்து முதலாம் கடிதத்தை எழுதுகிறார். (I தீமோத்தேயு 3:15) எபேசு பட்டணத்தில் இருந்த சபை, பலவிதமான வேற்று உபதேசங்களை பின்பற்றி வந்தது. அங்கே ஊழியம் செய்ய அனுப்பிவிடப்பட்ட தீமோத்தேயுவிற்கு பவுல் இந்த நிருபத்தை எழுதுகிறார். (1தீமோத்தேயு 3,4 ) இந்த எபேசு சபையின் ஸ்திரிகளில் சிலர், பொய்யான உபதேசங்களுக்கு செவிசாய்த்து, வழிவிலகி சென்றனர். (2 தீமோத்தேயு 3:6,7 ; 4:1-3) அமைதலுள்ள ஆவியோடு மாயமற்ற உபதேசத்திற்கு செவிகொடுக்காமல், போதனை செய்கிறவர்களோடு தர்க்கித்தனர். எனவே பவுல், ஸ்திரிகள் நற்போதனைகளை சாந்தமாய் கேட்டு , இருதயத்தில் ஏற்றுக்கொண்டு, அதன்படி அமைதலான ஜீவியம் தங்கள் குடும்பங்களில் காணப்பட கற்றுக்கொள்ளகடவர்கள் எனக் கூறுகிறார்.

• இன்று நாம் சபையின் செய்திகளை அமைதலோடு கற்றுகொள்கிறோமா? மற்றவர்களுக்கு உபதேசிக்கிரவர்களாய் காணப்படுகிறோமா?

• அல்லது,சபையின் நடைமுறைகளை பிறரிடம் விமர்சிக்கிறோமா?

• நம்முடைய ஜீவிதம் அமைதலாய் உள்ளதா?

4. I தீமோத்தேயு 6:7, 8 - போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை , இதிலிருந்து ஒன்றும் கொண்டுபோவதுமில்லை

• இன்று என் வாழ்க்கையின் எந்த இடத்திலே 'போதும்' என்று இருக்க வேண்டும்?

• அளவுக்கு அதிகமாக, அல்லது வசனத்திற்கு புறம்பாக எதை நான் விரும்புகிறேன்?

குடும்ப வாழ்க்கை

1. எபேசியர் 5:23, 24 - கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுப் போல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்;...ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்த புருஷர்களுக்கு எந்த காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்.

• குடும்பத்தின் தலைவன் கணவர். அது தேவனால் அவருக்குக் கொடுக்கப்பட்ட கடமை. என்னுடைய கணவரை குடும்பத்தின் தலைவராக காண்கிறேனா? அவர் என்னை வழி நடத்த அனுமதிக்கிறேனா?

• சபையானது கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிவது போல நான் என் கணவருக்கு கீழ்ப்படிகிறேனா?

• என்னுடைய எண்ணங்களிலும், செய்கையிலும் கணவருக்கு கீழ்ப்படிகிறேனா?

2.எபேசியர்5:33"... மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள்"

• நான் என் கணவரை மதிக்கிறேன் , அவர் மீது மரியாதை வைத்துள்ளேன் என்பதை அவர் உணர்ந்துள்ளாரா?

• என்னுடைய வார்த்தையினாலும், நடக்கையினாலும், ஆலோசனைகளினாலும் மற்ற பெண்கள் தங்கள் கணவரை மரியாதையோடு காண மாதிரியாய் உள்ளேனா?

3. I தீமோத்தேயு 2:15-"அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்.

• பிள்ளைகளை பெற்று, தேவ பக்தியுள்ளவர்களாய் வளர்ப்பதே தேவன் எனக்கு கொடுத்த பெரிய பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்பட்டது உண்டா?

• என்னுடைய நடக்கையிலும், பேச்சிலும், செயலிலும் பிள்ளைகளுக்கு நல்ல உதாரணமாக இருக்கின்றேனா?

4.II தீமோத்தேயு 3:15-"கிறிஸ்து இயேசுவை பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக் கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயது முதல் அறிந்தவனென்றும் உனக்கு தெரியும்"

• என்னுடைய பிள்ளைகளுக்காக தினமும் ஜெபிக்கின்றேனா?

• அவர்களுடைய இருதயத்தில் தேவ வார்த்தையை விதைக்க உழைக்கின்றேனா?

• சுய வேலைகளை பாராமல், பிள்ளைகளை சபைக்கு அழைத்து வந்து, தேவ வார்த்தைகளை கேட்கச் செய்கிறேனா?

• சபையின் விசுவாசிகளோடு பிள்ளைகள் ஐக்கியமாக உள்ளார்களா?

• தேவனையும் அவருடைய சத்தியத்தையும் கேட்டு புரிந்துகொள்கிறர்களா?

வீடு

1. நீதிமொழிகள் 14:1 -" புத்தியுள்ள ஸ்திரி தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரியோ தன் கைகளினாலே அதை இடித்துப்போடுகிறாள்"

• இந்த இரண்டு ஸ்திரிகளில் யாருடைய குணம் என்னிடம் உள்ளது. என்னுடைய நோக்கமும் செயலும் எதை நோக்கி செல்கிறது?

2.நீதிமொழிகள் 31:27 -"அவள் சோம்பலின் அப்பத்தைப் புசியாமல், தன் வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள்"

• என்னுடைய வீட்டின் காரியம் கிரமமாக உள்ளதா?

• நேர்த்தியான , தூய்மையான வீடாக உள்ளதா?

• கர்த்தர் விரும்பாத பொருட்கள் வீட்டிலே உண்டா ?

• என்னுடைய வீட்டில் நான் கவனிக்க வேண்டிய முக்கியமான காரியங்கள் என்னென்ன?

3. I தீமோத்தேயு 5:14-"...விவாகம் பண்ணவும், பிள்ளைகளை பெறவும், வீட்டை நடத்தவும் ..."

• வீட்டின் காரியத்தை குறித்து தேவன் கொடுத்த திட்டம் இதுவே - இதை குறித்து என்னுடைய எண்ணம் என்ன? வீட்டுவேலைகளை நான் பொறுப்புடன் செய்கிறேனா?

• தேவன் விரும்பும் வண்ணம் வீட்டை நிர்வாகிக்க விருப்பம் உண்டா?

சமுதாயம்

I தீமோத்தேயு 5:10-"பிள்ளைகளை வளர்த்து, அந்நியரை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக்கழுவி, உபத்திரப்படுகிறவர்களுக்கு உதவி செய்து, சகலவித நற்கிரியைகளையும் ஜாக்கிரதையாய் நடப்பித்து ,இவ்விதமாய் நற்கிரியைகளைக் குறித்து நற்சாட்சி பெற்றவளுமாயிருந்தால் ..."

• நம்முடைய வீடு ஊழியங்களுக்கு திறந்து கொடுக்கப்படுகிறதா?

• நம்மை சுற்றி உள்ளவர்கள் தேவனை அறிய வாய்ப்புள்ளதா?

• சபையின் ஊழியங்களில் சகோதரிகளோடும், பிள்ளைகளோடும் பங்கு கொள்கிறேனா?

• மற்ற விசுவாசிகளின் தேவைகளை அறிந்து வாழ்கின்றேனா? அவர்களுக்கு என்னால் ஆறுதல் உண்டா?

மேன்மையான நோக்கம்

1.தீத்து 2:4, 5-"தேவவசனம் தூசிக்கப்படாதப்படிக்கு பாலிய ஸ்திரிகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும் , வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி ,நற்காரியங்களை போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரிகளுக்கு புத்திசொல்லு. "

• மேற்கூறிய வசனத்தின் வரிசையின் படி நான் விருப்பம் கொள்கிறேனா? அல்லது, வேறு ஒரு ஒழுங்கு முறையில் வாழ்க்கையின் திட்டங்களை தீட்டுகிறேனா?

• என்னுடைய குடும்பத்தை நேசித்து அவர்களது தேவைகளை சந்திக்க போதுமான அளவு முயற்சி செய்கிறேனா?

• என்னிலே சுயநலமற்ற , தியாகமான, சேவிக்கிற அன்பின் மாதிரியை என் கணவரும், பிள்ளைகளும் காண்பார்களா?

• நான் ஆவியிலே எளிமை, அன்பு, சுய அடக்கம் கொண்டவளாக உள்ளேனா?

• என்னுடைய வாழ்கை வேதம் சித்தரிக்கும் குணசாலியான ஸ்திரிபோல உள்ளதா?

மேற்கண்ட வசனங்கள் பெண்களை குறித்ததான தேவனுடைய இருதயத்தை வெளிப்படுத்துகிறது. அதோடு தொடர்புடைய கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளித்திருப்பீர்கள். நாம், எங்கு குறைவு பட்டு காணப்படுகிறோமோ அங்கு தேவ ஆவியானவர் உதவிக் கொண்டு சரி செய்து கொள்வோம். பின் ஒரு நாளில் நம்முடைய ஆண்டவரின் சந்நிதானத்தில் மாசற்ற பிள்ளைகளாய் நிற்க வழி செய்வோம்.

- பெண்கள் கலந்தாய்வு, டேரா பிரதரன் சபை ,துபாய்.
நன்றி: http://tamilbrethren.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக