பக்கங்கள்

செவ்வாய், 11 டிசம்பர், 2012

அரிசி உருண்டை


அரிசி உருண்டை


அரிசியை வறுக்கும்போது வாணல் நல்ல சூடாக இருக்க வேண்டும். அப்போதுதான்  அரிசி பூ மாதிரி பொரிந்து வரும். இல்லையென்றால் சரியாகப் பொரியாமல்  அரிசியின் நிறம் மட்டும் மாறியிருக்கும்.
அரிசியை வறுக்கத்தான் நேரமெடுக்கும்.மற்ற வேலைகள் கடகடவென முடிந்துவிடும்.இது எளிதாக செய்யக்கூடிய இனிப்பு.
தேவையானப் பொருள்கள்:
புழுங்கலரிசி_ஒரு கப்
பொடித்த வெல்லம்_ஒரு கப்
தேங்காய்ப்பூ_ஒரு டீஸ்பூன் (விருப்பமானால்)
தண்ணீர்_2 கப்
ஏலக்காய்_1
செய்முறை:
ஒரு அடி கனமான வாணலியை அடுப்பில் ஏற்றி நன்றாக சூடேறியதும்  ஒரு கைப்பிடி அளவு அரிசியைப் போட்டு ஒரு தோசைத் திருப்பியால் விடாமல் கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.
அரிசி நன்றாகப் பொரிந்து வந்ததும் எடுத்து ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆறவிடவும்.
இவ்வாறே எல்லா அரிசியையும் பொரித்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு,கூடவே ஏலக்காயையும் போட்டு ரவை பதத்திற்கு இடித்துக்கொள்ளவும்.
மைய இடிக்க வேண்டாம்.அது பொரி மாவாகிவிடும்.தண்ணீரும் ஊற்ற வேண்டாம்.
ஒரு கனமான பாத்திரத்தில் வெல்லத்தைப்போட்டு,அது மூழ்குமளவு தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.வெல்லம் கரைந்ததும் வடிகட்டி (மண்,தூசு போக) மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் தீயை மிதமாக வைத்துக்கொண்டு இடித்து வைத்துள்ள மாவைக் கொட்டி,விடாமல் கிளறிவிடவும்.கிளறுவதற்கு   whisk  ஐப் பயன்படுத்தினால் கட்டிகளில்லாமல் வரும்.பாகுப்பதமெல்லாம் வேண்டாம்.
எல்லா மாவையும் கொட்டிக் கிளறிய பிறகு  whisk  ஐ எடுத்துவிட்டு சிறு கரண்டியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
சிறிது நேரத்திலேயே வெந்துவிடும்.நன்றாக வெந்துவிட்டால் ரவை இருப்பது மாதிரி தெரியாது.இப்போது தேங்காய்ப்பூவை சேர்த்துக்கிளற வேண்டும்.
பிறகு இறக்கி ஆறவைத்து லேசாக சூடு இருக்கும்போது உருண்டைகளாகப் பிடிக்க வேண்டும்.
அல்லது இறக்கியவுடன் ஒரு தட்டில் கொட்டி பரப்பி துண்டுகள் போட்டு சாப்பிடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக