பக்கங்கள்

ஞாயிறு, 25 நவம்பர், 2012

ஜாதி பிசாசு - CSI சபைக்குள்ளே!

ஜாதி பிசாசு - CSI சபைக்குள்ளே!

ஜாதி பிசாசு
இன்று உலகம் எங்கும் இன வித்தியாசம் நமக்குள் இருக்கக்கூடாது என்று முழு உலகதலைவர்களும் வலியுறுத்திக்கொண்டிருக்கிறார்கள். இன வித்தியாசம் இனவெறியாக மாறிவருவது நாட்டு மக்களிடம் பெரும் பிரச்சனைகளை உருவாக்கி, போராட்டங்கள் உண்டாகி, ஒருவரை ஒருவர் கொன்று குவிக்கும் நிலை முழு உலகத்திலும் இன்றும் சம்பவித்துக்கொண்டிருக்கின்றன.
நம் பாரததேசத்தில் இனப்பிரச்சனையில்லை. ஆனால் ஜாதி பிரச்சனை மிக அதிமாக உண்டு. வட இந்தியா தொடங்கி தென் இந்தியாவில் கன்னியாகுமரிமுனைவரை ஜாதி பிசாசின் பிரச்சனை பூதாகாரமாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது. தேசத்தலைவர்கள், அரசியல்வாதிகள், அரசாங்கம், நீதிமன்றம் யாவும்ஜாதி வேறுபாடு நாட்டைவிட்டு நீக்கப்படவேண்டும் என்று அறிக்கையில்மட்டும் அறிவிக்கின்றனர். ஆனால் அவர்களால் செயலில் நிறைவேற்ற இயலவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், நாம் குறிப்பாக கிறிஸ்தவ சபைகள், விசுவாசிகள் ஜாதி இருக்கக்கூடாது என்று பிரசங்கிக்கிறோம். கிறிஸ்தவ சபை தலைவர்கள், ஆயர்கள், பிஷப்மார், பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்கள் ஆராதனையில் ஜாதிவெறி வேண்டாம் என்று பிரசங்கித்தாலும் ஜாதிவெறிவெளியில் காணப்படாமல் சபைகளுக்குள் மாறாமல், மறையாமல் அப்படியேதான் இருக்கிறது. கிறிஸ்தவ பிள்ளைகளின் திருமணங்களில் இவற்றைக் கண்கூடாக காண்கிறோம். இப்படி இலைமறைவாக நம் CSI சபைக்குள் புதைந்துகிடக்கும் ஜாதிவெறி, இப்போது உலகத்திலேயே குறிப்பாக இந்தியாவிலேயே முதன்முதல் மதுரை-ராமநாதபுரம் CSIதிருமண்டலத்தில் வெளிப்படையாக, துணிகரமாக ஜாதிவெறியை அச்சடித்து, அறிவித்துகாட்டியிருக்கிறார்கள். அதன்மூலம் தங்கள் ஆவிக்குரிய சாட்சி கெட்டநிலையை வெளியரங்கமாக காட்டியிருப்பது கிறிஸ்தவ உலகில் பெரும் தலைக்குனிவை உண்டாக்கிவிட்டது. இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்ட அனைவரும் ஒருதாய் வயிற்றுபிள்ளைகள் மாதிரி ஆவர். கிறிஸ்தவ சபையிலும், பரலோகத்திலும் ஜாதிக்கு இடமே இல்லை.
நீங்கள் காண்பது மதுரை-ராமநாதபுரம் திருமண்டல CSI சபை உறுப்பினர் படிவமாகும். இதில் வட்டமிட்டு காண்பித்த வார்த்தையை கவனியுங்கள். CSI சபையில் அங்கம் வகிக்கும் நீ எந்த ஜாதியை சேர்ந்தவன் என்று குறிப்பிடவேண்டுமாம். இந்தியாவில் அல்லது இலங்கையில் எங்காவது எந்த சபைகளிலாவது இப்படி ஜாதியை கேட்கும் வெட்கம்கெட்ட சாட்சியில்லாநிலையை கேட்டதுண்டா? அதனால்தான் இதை ஜாதி பிசாசு என்றேன். சபைக்குள்ளும் இந்த ஜாதிபிசாசு பலவிதங்களில் தலைவிரித்தாடுகிறது. ஜாதி என்ற பெயரில் சபை உறுப்பினர் படிவம் ரூபத்தில் இந்த ஜாதிபிசாசை மதுரை CSI திருமண்டலத்தில் வெளிப்படையாக அச்சிடப்பட்டு காட்டப்பட்டுள்ளது. 
ரேஷன் கார்டுக்காக, ஜாதிகணக்கெடுப்புக்காக அரசாங்கம் ஆட்களை வீடுகளுக்கு அனுப்பும்போது அல்லது பள்ளியில் பிள்ளைகளை சேர்க்கும்போதும் படிவத்தில் (form) ஜாதி என்ற இடத்தில் உண்மை கிறிஸ்தவர்கள் தங்களை இந்திய கிறிஸ்தவன் என்றுமட்டுமே குறிப்பிடுவார்கள் அல்லது நாங்கள் ஜாதியைக்குறித்து எழுதவிரும்பவில்லை என்று அரசாங்க கணக்கெடுப்பின்போதே தைரியமாக, ஏராளமான உண்மை கிறிஸ்தவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மதுரை திருமண்டல CSIஅங்கத்தினர்களாகிய நீங்கள் உங்கள் படிவத்தை எழுதி நிரப்பும்போது CSI திருமண்டலம் ஜாதியைப்பற்றி கேட்பது தவறு என்றோ, ஜாதியைப்பற்றி நாங்கள் குறிப்பிடவிரும்பவில்லை என்றோ அல்லதுஇந்திய கிறிஸ்தவன் என்றோ குறிப்பிட்டு உங்கள் எண்ணத்தை அந்த படிவத்திலேயே எழுதி திருமண்டல பொறுப்பாளர்களை உணர்த்துங்கள். இந்த சாட்சிகெட்ட சபை அங்கத்தினர் விண்ணப்பபடிவத்தை தயாரித்தது, மரித்த பிஷப்.ஆசீர் அவர்கள் காலத்திலா? அல்லது இப்போதுள்ள தற்காலிக பொறுப்பாளர்களா? என்ற விவரம் அறியவில்லை. ஆனால் இது டையோசிஸ்ஸில் நடக்க இருக்கும் தேர்தலுக்கான பிசாசின் தந்திரம் ஆகும். இந்த ஏற்பாடு முழுதிருமண்டலத்திலும் எந்த ஜாதிமக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்பதை அறிவதற்காக அல்லாமல் வேறுகாரணம் நிச்சயம் இருக்காது. ஒவ்வொரு இடத்திலுள்ள CSI சபைக்குள் நம்ம ஜாதி ஆட்கள் எத்தனைபேர், மற்ற ஜாதியை சேர்ந்தவர்கள் எத்தனைபேர் என்பதை இதன்மூலம் அறிவது மிகசுலபம். அதன் அடிப்படையில்தான் புதிய பிஷப்பும் தெரிந்தெடுக்கப்படுவார்கள். இதற்குடையோசிஸ் மக்கள் இடம்கொடுக்க கூடாது. மதுரை CSI திருமண்டலமக்கள் அனைவரும் இந்த படிவத்துக்கு உங்கள் எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும். இதை மதுரை CSI டையோசிஸ் அனுமதித்தால், மற்ற எல்லா CSIதிருமண்டலங்களிலும் இந்த ஜாதிபிசாசுகள் எளிதாக நுழைந்துவிடும். ஜெபத்தோடு சாத்வீகமான முறையில் போராட்டங்கள் எதுவும் நடத்தாமல் ஒவ்வொரு CSI சபை கமிட்டியிலும் ஜாதி எதிர்ப்பை எழுத்தில் எழுதி, அதை மினிட்சில் பதிவுசெய்து, அந்த சபை கமிட்டிகள் தனித்தனியாக உங்கள் கமிட்டி தீர்மானத்தை கடிதம் மூலம் எழுதி திருமண்டலத்துக்கும் - சினாடுக்கும் உங்கள் எதிர்ப்பை தெரியப்படுத்துங்கள் இதுதான் கிறிஸ்தவ ஒழுங்கு. தனிப்பட்டமுறையிலும் எதிர்ப்பை அறிவிக்கலாம். 
இதைநான் ஜாமக்காரன் மூலம் அறிவித்ததால் நீங்கள் என்மேல் வெறுப்புக்கொண்டு என்னை உங்கள் சபை கன்வென்ஷனுக்கு அழைத்தாலும் சரி - அழைக்கவிட்டாலும் சரி அல்லது ஏற்கனவே கூட்ட ஏற்பாடு செய்து என் தேதியை பெற்றுக்கொண்டவர்கள் என் கூட்டங்களை கேன்ஸல் செய்தாலும் சரி - என் ஜாமக்காரன் வேலையான அறிவிப்பையும், எச்சரிப்பையும் வசனத்தின்படி உங்களுக்காகவும், அனைத்து CSI, CNI மக்களுக்காகவும் இவ்விவரத்தை அறிவித்துவிட்டேன். என் கடமை முடிந்தது! தீர்மானம் எடுக்கவேண்டியது மதுரை-ராமநாதபுரம் திருமண்டல CSI சபை மக்கள், ஆயர்கள், பொறுப்பாளர்கள் ஆகிய உங்களுடையது ஆகும். இந்த விஷயத்தில் கர்த்தர் உங்கள் அனைவரையும் கணக்கு கேட்பார் என்பதை மறக்கவேண்டாம்!
மத் 17:21, இந்த ஜாதிப்பிசாசு ஜெபத்தினாலும், உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ் விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்று இயேசுகிறிஸ்து கூறினார். இந்த வசனத்தில் வரும் ஜாதிப் பிசாசு என்ற வார்த்தை மூலபாஷையில் சில முக்கியதோல் சுருள்களில் இல்லாததால் கத்தோலிக்க வேதபுத்தகத்தில் 1978 வருடத்துக்குமுன் உள்ள அவர்கள் வேதபுத்தகத்தில் இந்த 21ம் வசனத்தைமட்டும் நீக்கிவிட்டனர். இதை இங்குநான் குறிப்பிடக்காரணம் இந்தகுறிப்பிட்டவசனம் நம் இந்தியாவிலுள்ள ஜாதியை குறிக்கும் ஒருசொல் அல்ல. இந்த வசனத்தை ஒருவகைபிசாசு என்று மொழிபெயர்க்கலாம். ஆனால் நான் எழுதிய இந்த குறிப்பிட்ட எச்சரிக்கை செய்திக்காக நாம் குறிப்பிடும் இந்த ஜாதியை பிசாசுஎன்றே, நாம் பெயரிட்டு அழைப்பது நாம் ஜாக்கிரதையாக இருக்க பிரயோஜனமாக இருக்கும். ஜெபியுங்கள்.

From : Jamakaran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக